Thursday, September 24, 2009

நினைக்க தெரிந்த மனமே


நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரியவில்லை

நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரிந்திருந்தால்

காதல் என்ற
புனிதமான வாழ்வில்
சோகம் என்ற நிகழ்வு
இடம் பெறாது....!

ஆனால்
நினைக்கத் தெரிந்த
மனங்களுக்குத் தான்
மறக்கத் தெரிவதில்லையே...!

Sunday, September 6, 2009

எந்தக் கடவுளும் இருப்பதாய்


அது நத்தாருக்கு முதல் நாள்
கல்லடி கரையில்
நண்பனோடு காற்றுவாங்கிய மாலை!

கடலை அண்ணா கடலை...
அருகில் நின்றான்
அரைகாற்சட்டை
பாதி பெனியன்
கையில் சிகப்பு நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!

மெல்லக் கதை கொடுத்தேன்
அண்ணா நான் ஆறாவது படிக்கிறேன்
அப்பா ஆத்துக்கு மீன்பிடிக்க போறார்
அம்மா வீட்டிலதான்
அக்கா சடங்காயிற்று
தம்பி மூனாவது என்றான்!

அவனுக்காக கடலை வாங்கி
நல்லா படி என்றேன்!

கட்டாயம் நான் படிச்சு
நாளை உங்களைப் போல்
ஆவேன் என்றான்!

விடிந்த பொழுதுகளில்
ஊரெங்கும் பரபரப்பு
ஊருக்குள் கடல் வருகுதாம்!

வைத்தியசாலை நிறைந்த்து
நடைபாதை எங்கும்
உயிரற்ற உடலங்கள்
நிர்வாணமாய்!

சட்டென தலை சுற்றியது
இது எங்கேயோ
பார்த்த முகம்
ஆம்...... நேற்றுப்பார்த்த
அதே முகம்
கையில் நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!

நாளை என்னைப் போல்
வருவேன் என்றாயே......
விழிகள் பனித்தன
உனக்காக இதைவிட வேறு
எதுவும் செய்ய முடியவில்லையே....!

எந்த சாமியும்
எந்த நூலும்
எந்த சிலுவையும்
உன்னை காக்க வில்லை!

எனக்கென்னமோ
எந்தக் கடவுளும்
இருப்பதாய்த்தோன்றவில்லை!

Saturday, September 5, 2009

ஊனமுற்றோருக்கு


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப் பாய்ந்து
ஒற்றைக் காலில்
ஒரு கைப்பிடியில்
அலைந்து நின்றான்
மிதிவெடி மிதித்தவன்!

சட்டென திரும்பி
ஜன்னல் ஊடே
ஓடும் மரங்களை
அதிசயத்துப் பார்த்து
பாவனை செய்தேன்!

ஒரு மணிநேரம்
ஒற்றைக் காலில்
தொங்கிக் களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!

என் இருக்கைத் தலைமேல்
அழகு வாசகமாய்
இது ஊனமுற்றோருக்கு!