Thursday, August 27, 2009

நண்பனே......!


தென்னைமரங்களை காணும்போதெல்லாம் கடலலையில் கால்நனைத்து
குழிநண்டு பறித்து கும்மாளமடித்து
பாட்டியின் கதைகேட்ட ஞாபகங்கள்
நேற்றுப்போல் இன்றும்
நீங்காமல் நிற்குதடா !

நீயும் நானும் ஒளிந்து விளையாடிய நாட்களில்
ரோந்துவந்த ஒருகூட்டம்
நம் பிடரி பரத்திப்போனது !

இளமையின் துடிப்பால் சென்றோமடா
பாதை ஒன்றெனத்தானே கொண்டோமடா
தலைமையின் தவறால்
பாதைகள் மாற
தனித்தனியே சென்றோமடா !

உன்னை நானும் என்னை நீயும்
குறியிடும் காலம் வருமென
கனவிலும் கண்டேனில்லையடா !

உன் மரணப்படுக்கை
என் சுட்டுவிரல் அசைவில்
துடித்துத்தான் போனேனடா !

அப்போதே நானும்
விசைதட்டி வீழ்ந்திருக்க வேண்டும்
விட்டு விட்டேன் !

இறுதியாக !
இன்னொரு பிறவியில்
என் மரணப்படுக்கை
உன் மடியில் விழவேண்டும்
என்பதை விடவேறொன்றும் வேண்டாமடா எனக்கு.

No comments: